சிறுகதை
விழித்தவுடன் தகரத்தில் அலைந்து பரவிப்படிந்த புகைச்சித்திரத்தை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த பின்னரே தான் சமையல் கட்டில் படுத்திருப்பது முனிக்கு உரைத்தது. சட்டெனெ எழுந்து உட்கார்ந்தான். கைலி அவிழ்ந்திருந்தது. அதுவே இரவு போர்வையானது நியாபகம் வந்தது. பின்மண்டை கனத்து பின் வலித்தது. எழ மனமின்றி அப்படியெ அவிழ்ந்த கைலியுடன், தலையை பின் சரித்து, கைகளை பின்பக்கம் ஊன்றி உட்கார்ந்திருந்தான். வலப்புறம் சமையல் மேடையில் எதுவோ கொதித்த சத்தம் கேட்டது. வெகு நேரம் உறங்கிவிட்டோம் என்ற எண்ணம் அவனுக்கு அயர்ச்சியை தந்தது.